ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மீது பொன்னையன் கண்டனம்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த அறிக்கை அரசியல் அறிக்கை என முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு ஐஏஎஸ் அதிகாரி அரசியல்வாதியை போல பேசியுள்ளார் என்றும் பொன்னையன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்ற முன்னாள் நிதியமைச்சர் பொன்னையன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.

பினாமி ஆட்சியாளர்களின் கைப்பாவையாக ராதாகிருஷ்ணன் மாறி விட்டதாகவும் அவர் கூறினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் அறிக்கையை போல் உள்ளதாக அவர் கூறினார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அரசியல்வாதி போல் பேசுவதாகவும் பொன்னையன் குற்றம்சாட்டினார். ஜெயலலிதா மரணத்தில் சம்பந்தப்பட்ட கொலைக்காரர்கள் யார் யார் என விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு போயஸ்கார்டன் இல்லத்தில் என்ன நடந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.