கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஏழைகளின் பண்டம் என்றழைக்கப்படும் கடலைமிட்டாய் தயாரிப்பில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தான். இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குடிசை தொழிலாளான கடலைமிட்டாய்க்கு இதுவரை வரி கிடையாது, தற்போது மத்தியரசு விதித்துள்ள ஜீ.எஸ்.டியில் கடலை மிட்டாய்க்கு 18சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு இனிப்பு பண்டங்களுக்கு 5 சதவீதம் விதிக்கப்பட்ட நிலையில் கடலைமிட்டாய்க்கு 18சதவீத வரி விதிப்பு வணிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதன்காரணமாக கடலைமிட்டாய் தொழிலும், உற்பத்தியாளார்கள், தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் 18சதவீத வரிவிதிப்பினைகண்டித்தும், கடலை மிட்டாய்க்கு ஜீ.எஸ்டியில் இருந்து வரிவிலக்கு அளிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருந்தகம் அருகே கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான கடலைமிட்டாய் வணிகர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.