106 நோயாளிகளை மாரடைப்பு ஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்

ஜெர்மனியை சேர்ந்த ஆண் நர்ஸ்  நீல்ஸ் ஹோகேல் ( வயது 41)  வடக்கு நகரமான  பிரீமெனின் நகரில் டெல்மேன்ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். ஆழ்ந்த கவனிப்பு நோயாளிகள் மீது உடல் தீங்கு விளைவிக்கும் மருந்துகளை ஏற்றி இவர் ஏற்கனவே 2015 இல் இரண்டு கொலைகள் மற்றும் நான்கு கொலை முயற்சிகளை செய்ததாக  இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டு உள்ளது. தொடர்ந்து நடந்த விசாரணையில் நர்ஸ்  ஹோகேல்  900க்கும் மேற்பட்ட நோயாளிகளை கொலை செய்து உள்ளதாக தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே வியாழனன்று போலீசார் வெளியிட்ட தகவலில் மேலும் 16 நோயாளிகளின் சாவில் ஹோகேல் சம்பந்தபட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மேலும் விவரங்களை  திரட்டி அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஹோகேல் மீது புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சாகும் தருவாயில் இருக்கும் நோயாளிகளை காப்பாற்றினால், மருத்துவமனையில் தனக்கு மரியாதையும் புகழும் கிடைக்கும் என ஹோகேல் நம்பியுள்ளார். இதற்காக ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு மாரடைப்பை ஏற்படுத்தும் மருந்தை அதிக அளவில் அவர் செலுத்தி உள்ளார் அவ்வாறு செலுத்தப்பட்ட நோயாளிகளில் சிலரை மட்டுமே அவரால் காப்பாற்ற முடிந்துள்ளது.

பலர் உயிரிழந்த போதும் தனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹோகேல் தொடர்ந்து இதே மாதிரி வேறு நோயாளிகளுக்கும் செய்து வந்துள்ளார்.1999 முதல் 2005 வரையான காலகட்டத்தில் ஹோகேல் பணிபுரிந்த இருவேறு மருத்துவமனைகளில் மொத்தம் 106 நோயாளிகளின் சாவுக்கு ஹோகேல் காரணமாகி உள்ளார். தற்போது மேலும் 5 உடல்களை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைக்கு உடுபடுத்தியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கொலை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.