குழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை முன்னிட்டு 100 மூட்டை அரிசி வழங்கும் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ்

கொரோனா வைரஸ் உலகை முடக்கிப்போட்டிருக்கிறது. வல்லரசு நாடுகளே திண்டாடி வருகின்றன. நோயை கட்டுப்படுத்த மனிதர்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்கள். கொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது. எளியவர்கள் பலருக்கு வெளியில் நடமாட முடியாத சூழல் இருப்பதால், எந்த ஒரு பணியும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதனால் நம் நாட்டிலும் பெருமளவு ஏழைகள் உணவிற்கே திண்டாடும் நிலையும் உருவாகி வருகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் ஏழை, எளியோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகாவின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு எளியவர்கள் 100 பேருக்கு தலா 1 மூட்டை என 100 மூட்டை அரிசி வழங்கியுள்ளார்.

பிரபல நடிகை Dr. ஜெயசித்ரா அவர்களின் புதல்வனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரீஷ் வழக்காமாகவே தனது பிறந்த நாள் மற்றும் முக்கியமான நல்ல நாட்களை முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று (31.03.2020) மார்ச் 31 தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை,வெகு வித்தியாசமான வகையில் கொண்டடியுள்ளார் அம்ரீஷ். கொரொனா வைரஸ் தனிமைப்படுத்தல் காரணமாக அனைவரும் வீட்டிற்குள் தனிமைப்பட்டிருப்பதால தன் குழந்தையின் பிறந்த நாளை ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று கொண்டாட முடியாத காரணத்தால் எளியவர்கள் 100 பேருக்கு தலா 1 மூட்டை அரிசி வழங்கி கொண்டாடியிருக்கிறார். இவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகர் பிரபுதேவா நடிகர் லாரன்ஸ் முதாலாக பல பிரபலங்களும் இவரது செயலை பாராட்டி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

இது குறித்து இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் கூறியதாவது..

இன்று (31.03.2020) மார்ச் 31 என் பெண் குழந்தை ஜெய கௌஷிகாவின் முதலாவது பிறந்த நாள். இதனை வெகு விமரிசையாக கொண்டாட பல மாதங்களாக திட்டமிட்டு இருந்தேன். வழக்கமாக எந்த ஒரு நல்ல காரியம் என்றாலும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் சென்று கொண்டாடுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸால் எல்லோரும் வீட்டிற்குள் இருக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த கொரோனாவை தடுக்க ஒரே வழி நம்மை தனிமைப்படுத்தி கொள்வது தான். நாங்கள் குடும்பமாக எங்களை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். யாரும் வெளியில் செல்வதில்லை. நம் அனைவரின் உயிரை காத்துகொள்ள நாம் தான் பொறுப்பேற்க வேண்டும். அவசியம் இன்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த தனிமைப்படுத்தல் காலம் பல ஏழை எளியோரை கடுமனளவு பாதிக்கிறது என்பதை அறிந்தேன் என் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு அவர்களில் 100 பேருக்கு 100 மூட்டை அரிசி வழங்கியிருக்கிறோம். அரசு, மருத்துவகழகம் அறிவுறுத்திய, வழிமுறைகளின் படியும் காவல்துறை வழிகாட்டிதலையும் பின்பற்றி, காவல்துறை டெபுடி கமிஷ்னர் அசோக் குமார் மேற்பார்வையில், மிகவும் பதுகாப்பான முறையில் எளியவர்களுக்கு அரிசி மூட்டையை விநியோகம் செய்தோம். இந்த பணி மனதிற்கு பெரும் மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. இந்நேரத்தில் எங்களின் இப்பணிக்கு உறுதுணையாக இருந்த காவல்துறை கமிஷ்னர் விஸ்வநாத் அவர்களுக்கும் டெபுடி கமிஷ்னர் அசோக்குமார் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உலகம் பல இன்னல்களை கடந்தே இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது. அதுபோல் அனைவரும் இணைந்து இந்த கொரோனாவையும் வென்றெடுப்போம் என்றார்.