மாநிலம் முழுதும் இன்று (ஆக. 2) தளர்வில்லா முழு ஊரடங்கு – முதல்வர்

தமிழகம் முழுதும், தளர்வுகள் எதுவும் இல்லாத, முழு ஊரடங்கு இன்று. தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, இம்மாதம், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது அரசு.

அதேநேரத்தில், பஸ், ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலா தலங்கள், கல்வி நிறுவனங்கள், உயிரியல் பூங்காக்கள் போன்றவை திறக்கவும் அனுமதிக்கப்படவில்லை. கடந்த மாதம் முழுதும், நோய் பரவலை தடுக்க, அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல, ஆகஸ்டில், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (ஆக 2) மாநிலம் முழுதும், எவ்வித தளர்வுகளும் இல்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் மட்டுமே செயல்படும். காய்கறி கடை, மளிகை கடை உட்பட, அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும்; வாகனங்கள் எதுவும் இயங்காது. மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வராமல், முழு ஊரடங்கிற்கு, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளது அரசு.