தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலராலும் பாராட்டப்பெற்ற பாரம்

தானாக உருவான சுயம்பு போல் தேசியவிருதை பல படங்களுடன் போட்டியிட்டு வென்று அனைவர் கவனத்தையும் ஈர்த்து என்ன படம் இது எனக்கேட்க வைத்த தமிழ் திரைப்படம் “பாரம்”. ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை Reckless Roses நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலராலும் பாராட்டப்பெற்ற இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது Gross  Root Films நிறுவனம் பெயரில்  SP Cinemas மூலம் வெளியிடுகிறார். படவெளியீட்டை ஒட்டி இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில்  கலந்துகொண்டு பேசிய

SP Cinemas நிறுவனர் கிஷோர் பேசியதாவது…

எனக்கு இந்தப்படத்தை வெளியிட அனுமதித்த தயாரிப்பாளருக்கும் இயக்குநர் வெற்றி மாறனுக்கும் நன்றி. இப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம். இப்படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. இப்படத்தை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும். நீங்கள் தான் அனைவரிடமும் இப்படத்தை எடுத்து செல்ல வேண்டும்.  நன்றி

தயாரிப்பாளர் ஆர்த்ரா ஸ்வரூப் பேசியதாவது…

நான் ஒரு மும்பை பெண்.  இந்த வாழ்க்கையை பற்றி எதுவும் தெரியாது. இதைப்பற்றி அறிந்த போது அது எனக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. என் அம்மா ப்ரியா கிருஷ்ணசாமி இந்தக்கதையுடன் வந்தபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் கற்றுக்கொள்ள அதில் நிறைய இருந்தது. இந்தப்படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. இக்கதை தந்த பாதிப்பில் இதை உருவாக்க உதவிக்கரம் நீட்ட நான் முடிவு செய்தேன். இம்மாதிரி முதியவர்களுக்கு அன்பு கிடைக்க  வேண்டும். என் அம்மாவுடன் இப்படத்தில் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்தப்படம் அனைவரையும் கவரும் நன்றி.

இயக்குநர் ப்ரியா கிருஷ்ணஸ்வாமி

நாங்கள் இப்படத்தை மிக சிறிய படமாக தான் எடுத்தோம். தேசிய விருது கிடைத்தது இப்படத்திற்கு  நிறைய கதவுகளை திறந்து வைத்தது. இங்கு வந்திருந்து  பெரிய இயக்குநர்கள் பாரட்டுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. வெற்றிமாறன் இல்லையெனில் இந்தப்படம் ரிலீஸ் ஆகியிருக்காது. இயக்குநர் ராம் மூலம் தான் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்தேன். இப்போது படம் ரிலீஸாகிறது. இவர்களின் பெரிய மனதிற்கு நன்றி. சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இருவரும் நேரம் ஒதுக்கி இப்படத்திற்கு ஆதரவு தந்ததற்கு நன்றி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் கமலகண்ணன் பேசியது…

இந்த மேடையில் இயக்குநர் ப்ரியா சந்திக்கின்ற சூழ்நிலை எனக்கு ஏற்கனவே பழக்கமான ஒன்று. சுதந்திர பாணி படங்கள் எடுத்து அதை திரைக்கு கொண்டு வருவது  எத்தனை பிரச்சனை என்பது எனக்கு  தெரியும். இப்போது இந்தப்படம் பெரிய அளவில்  ரிலீஸாவதில் மகிழ்ச்சி. படம் பார்த்து இரண்டு நாள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் மனதிற்குள் படத்தின் அழுத்தம் ஓடிக்கொண்டே இருக்கிறது. மனதை பாரமாக்கும் கதையை தத்ரூபமாக சொல்லியுள்ளார்கள் இப்படம் தந்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் ஆதித்யா பேசியதாவது…

“பாரம்” படம் பார்த்தேன் மிகுந்த பாரமாக இருந்தது. கிராமங்களில் சுமை தாங்கி கல் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்கும் கல். அது போல் வீட்டில் சுமை தாங்கியாக சிலர்  இருப்பார்கள். ஆனால் நாம் மறந்து விடுகிறோம். அதை இந்தப்படம் ஞாபகப்படுத்தியது. இந்தப்படம் ஆழமான பாதிப்பையும், நல்லதை கற்றுக்கொடுக்கும் படைப்பாகவும் இருக்கும்  அனவரும் பார்க்க வேண்டிய படைப்பு இது.

இயக்குநர் அருண் கார்த்திக் பேசியது…

இயக்குநர் பிரியாவை முன்னதாகவே தெரியும். மும்பையில் இருந்து வந்து இம்மாதிரி படைப்பை எடுத்ததற்கு அவருக்கு நன்றி. முதல் படைப்பை உங்கள் ரத்தத்திலிருந்து உருவாக்குங்கள் என்று ஃப்ரெஞ்ச் இயக்குநர் கூறுகிறார். ஆனால் அப்படி உருவாக்கினால் படத்தை வெளியிடுவதில் தமிழ் சினிமாவில் நிறைய பாரம் இருக்கிறது. இந்தப்படம் அனைவரையும் போய்ச் சேர வேண்டும் என ஆசைப்படுகிறேன் அது நடக்க வேண்டும் நன்றி.

இயக்குநர் அஜயன் பாலா பேசியது…

வயதானவர்கள் படும் துன்பத்தை அவர்களால் வெளியில் சொல்ல முடியாது. அதன் உச்சத்தை சொல்கிறது இந்தப்படம். நம் கலாச்சாரத்தின் ஒரு அவலத்தை பேசியிருக்கிறது இந்தப்படம். இந்தப்படம் தேசியவிருது பெற்ற போது படம் பற்றி தெரியாமல் நானே விமர்சனம் செய்தேன் அதற்கு இப்போது மன்னிப்பு கேட்கிறேன். இப்படத்தை மக்கள் பார்க்க வேண்டும் வெற்றிமாறனால் இன்று அது நடக்கிறது அதற்கு அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் நடித்தவர்கள் ரியலிசத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். கண்ணில் பார்க்கும் வாழ்க்கையை திரையில் காட்டியிருக்கிறது பாரம். இப்படத்தில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது. எதார்த்தம் அவ்வளவு இயல்பாக இழையோடுகிறது. நம் அனைவரையும் பாதிக்கும் வகையில் இருக்கிறது “பாரம்”. இந்தப்படத்தை கொண்டாடுங்கள் நன்றி.

இயக்குநர் ராம் பேசியதாவது…

தேசிய விருது வாங்கினால் மட்டும்  நல்ல படம் என சொல்ல முடியாது. வாங்காவிட்டால் கெட்ட படமும் கிடையாது. “பாரம்” நல்ல படம். கோவாவில் இயக்குநரை சந்தித்தபோது இந்தப்படத்தை திரைக்கு கொண்டு வாருங்கள் என்றேன். எப்படி கொண்டு வருவது எனத் தெரியாது என்றார். தமிழ் நாட்டுக்கு வாருங்கள் என்றேன் வந்தார். திரை விழாக்காளில் எப்படி படம் பார்க்கிறார்களோ அதே போல் தான் தமிழகத்து திரையரங்குகளிலும்  படம் பார்ப்பார்கள். இங்கு படத்தை கொண்டாடுவார்கள். பாரம் படத்தை வெற்றிமாறனிடம் அறிமுகப்படுத்தினேன் அவர் ரிலீஸ் செய்கிறார் நன்றி. இப்படம் நல்ல படம் வெற்றி பெற வேண்டியது அவசியம். தேடிப்போயாவது இந்தப்படத்தை பாருங்கள் நன்றி

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது…

இயக்குநர் ராம் மூலம் தான் இந்தப்படத்தை பற்றி அறிந்தேன். ராம் பார்த்துவிட்டாரல்லவா அது போதும்   நான் ரிலீஸ் செய்கிறேன் என்றேன். எனது பெயர் மட்டுமே உபயோகிக்கப்பட்டது. SP Cinemas  தான் இந்தப்படத்தை வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு நன்றி. தமிழில் எல்லாவகையான படங்களும் ஆதரிப்பார்கள். ஆனால் இங்கு மற்ற மொழிகளில் மாதிரி சுதந்திர பாணி படங்களுக்கு பெரிய அளவில் வணிக ரீதியிலான  வெளியீடு கிடைப்பதில்லை. மீடியா ஆதரித்தால் மட்டுமே அப்படிபட்ட படங்கள் ஜெயிக்கிறது. நிறைய சமரசங்களுடன் தான் இந்தப்படத்தை செய்துள்ளார்கள். இந்த படத்தின் வணிக ரீதியான வெற்றி இதற்கு பிறகு வரும்  இது போன்ற படங்களுக்கு ஆதரவாக இருக்கும். இந்தபடத்தின் இயக்குநர்,  அம்மா, மகள் இருவருமே போராளிகள். இப்படிபட்ட ஒரு படத்தை எடுக்க தீர்மானித்து, எடுத்து தேசிய விருதுக்கு அனுப்பி, போராடி இப்போது திரைக்கு கொண்டு வருவது மிகப்பெரிய பயணம். நான் இந்தப்படத்தில் நான் ஒன்றுமே செய்யவில்லை. இந்தப்படத்தை வெளியிட இயக்குநர் ராம் தான் அதிக சிரத்தை எடுத்து  உழைத்திருக்கிறார். அவருக்கு நன்றி. படத்தை பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

இயக்குநர் மிஷ்கின் பேசியது…

இயக்குநர் ராம் போனில் அழைத்து நாம் செய்ய ஆசைப்படும் படத்தை ஒருவர் எடுத்திருக்கிறார், வந்து பாருங்கள் என்றார். சரி பார்க்கலாம் என்று போனேன். ராம் சொன்னால் நல்லாருக்குமே என்று நினைத்து போய் பார்த்தால் இயக்குநரை பார்த்தவுடன் இந்தப்படம் நல்லாருக்காது என்று முடிவு செய்து விட்டேன். இவர் என்ன படம் எடுத்து விடுவார் என்று நினைத்தேன். ஒரு கலைஞனின் வாழ்க்கையே எதிர்பார்ப்பில் தான் இருக்கிறது. தலைவலியுடன் தான் இந்தப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்தபோது என்னை நானெ செருப்பால் அடித்தது போல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் என கூச்சமாக இருந்தது. படம் பார்த்தவுடன் என் அம்மா அப்பா ஞாபகம் வந்து விட்டது. அவர்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது. என் தந்தை தான் எனக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவர். அவரை பார்த்து கொள்வதை மறந்து விட்டேன். நம் அம்மா அப்பாவை பார்த்து கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் படம் இது. நாங்கள் சொல்வதால் அல்ல உண்மையில் இந்தப்படம் ஒரு சத்தியம். வாழ்வை வாழச்சொல்லி கொடுக்கும் படம். இந்திய சினிமாவில் முதல் மூன்று இடங்களில் இந்தப்படம் இருக்கும். அன்பை சொல்லும் படம். இந்த நாடும் நகரங்களும் நம்மை அம்மா அப்பாவை விட்டு பிரிக்கிறது. நாம் நகரத்தை நோக்கி நகர்ந்து விட்டோம். நமக்கு பல பாடங்களை சொல்லி தரும் படம். இந்தப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஆறு ஏழு நகரங்களில் இந்தப்படத்தின் போஸ்டரை என் செலவில் ஒட்டப்போகிறேன். இது இந்தப்படத்திற்கு எனது நன்றிக்கடன். இந்தப்படம் என்னை மாற்றியது. இந்தப்படத்தை பாருங்கள் உங்கள் அம்மா அப்பாவை நேசிப்பீர்கள். உங்களை மாற்றும். தயவு செய்து இந்தப்படத்தை ஆதரியுங்கள் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து இயக்கம் – ப்ரியா கிருஷ்ணஸ்வாமி

ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன்

படத்தொகுப்பு – ப்ரியா கிருஷ்ணஸ்வாமி

இசை – வேத் நாயர்

தயாரிப்பு – Reckless Roses

தாயாரிப்பாளர் – ப்ரியா கிருஷ்ணஸ்வாமி , ஆர்த்ரா ஸ்வரூப்.