இயற்கை அழகில் யானையுடன்  போட்டோஷூட் நடத்திய பெண்; தமிழகத்தைச் சார்ந்த ஃபேஷன் டிசைனர் ஃபைசாகான் புதிய முயற்சி

அழகிய மற்றும் அதிர்ச்சியூட்டும் இயற்கை அழகு நிறைந்த சூழலில் மாடல் அழகி யானையுடன் இருப்பது போன்ற  போட்டோக்கள் அடங்கிய தனது நயாப் காலண்டரை, ஃபேஷன் டிசைனர் ஃபைசாகான் இன்று சென்னையில் அறிமுகம் செய்துள்ளார். இந்த வகையிலான காலண்டரை இந்தியாவில் முதன் முதலில் அவர் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்த காலண்டருக்காக எடுக்கப்பட்ட பிரத்யேக போட்டோஷூட்டில், பிக்பாஸ் புகழ் நடிகை சாக்சி அகர்வால், ஃபேஷன் டிசைனர் ஃபைசாகான் வடிமைத்த நேர்த்தியான ஆடைகளை அணிந்து கொண்டு, பசுமையான காடுகளுக்கு நடுவில் மிகப்பெரிய யானையுடன் போஸ் கொடுத்துள்ளார்.

இன்று நடைபெற்ற காலண்டர் வெளியீட்டு விழாவில், நடிகர்கள் சேரன், டேனியல் மற்றும் நடிகைகள் நமிதா, அதுல்யா ரவி, சாக்சி அகர்வால், ஸ்ரீதேவி, சுஜா வருணி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு, 12 மாதங்களுக்கான போட்டோக்களில்  ஆளுக்கொரு போட்டோவை  வெளியிட்டனர். பின்னர் அவர்கள் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதுகுறித்து பேசிய ஃபைசாகான், இந்த புதிய முயற்சியானது மிகவும் சவாலானதாகவும், கடுமையானதாகவும் இருந்தது. இதனை நாங்கள் ஆலப்புழாவில் தங்கி நான்கு நாட்கள் படம் பிடித்தோம் என்றார். அங்கு குடிக்க தண்ணீர் வேண்டுமென்றால் கூட 20 கிலோமீட்டர்கள் செல்ல வேண்டி இருந்தது. ஆனாலும் கூட எந்தவொரு தொந்தரவும் இல்லாத இயற்கை சூழல் எங்களுக்கு சாதகமாக இருந்தது. மேலும், இந்த போட்டோஷூட் மூலமாக காடுகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நினைத்தோம் என்றார்.

எப்பொழுதும் வித்தியாசமான அற்புதமான ஆடைகளை வடிவமைப்பதில் ஆர்வம் கொண்ட ஃபைசாகான் தனது ஃபேப் நிறுவனத்தை கடந்த மே மாதம் தொடங்கியதாகவும், தான்  வடிவமைத்துள்ள அந்த ஆடைகள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு அழகான அர்த்தமும், கதையும் இருப்பதாகவும் தெரிவித்தார். அதாவது ஜனவரி மாதத்திற்கான படத்தில், சாக்சி விளக்கினைத் தாங்கி இருப்பார். அது முதல் மாதம் நம் வாழ்வில் ஒளியைக் கொண்டுவருகிறது என்பதைக் குறிக்கும். அதேபோல், பிப்ரவரி மாதம் காதலுக்கானது என்பதால், சாக்சியின் உடை சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு கருப்பொருள் வைத்துள்ளோம் என்றார்.