“லட்சுமி பாம்ப்” படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது -கீயரா அத்வானி

தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை ஹிந்தியில் ‘லட்சுமி பாம்ப்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள்.

இப்படத்தை தமிழில் எழுதி இயக்கி மாபெரும் வெற்றிப் படமாக்கிய ராகவா லாரன்ஸ் தான் ஹிந்தியிலும் இயக்குகிறார்.

சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சின்ன மனக்கசப்பில் இந்தப் படத்தை தான் இயக்கவில்லை என்று லாரன்ஸ் அறிவித்தார். அவர் அறிவித்த உடனே
படக் குழுவினரும், படத்தின் கதாநாயகன் அக்ஷய் குமாரும் ராகவா லாரன்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்களின் அன்பை ஏற்ற லாரன்ஸ் மீண்டும் படத்தை இயக்க ஆயத்தமானார்.

மறுபடியும் இயக்குனர் பொறுப்பை லாரன்ஸ் ஏற்றுக்கொண்டது படக்குழுவை பெருமகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது.

படத்தின் கதாநாயகி கீயரா அத்வானி இதைப்பற்றி கூறும் போது,

“அவர் மறுபடியும் இப்படத்தை இயக்க ஒப்புக் கொள்வார் என்று நம்பி காத்திருந்தேன். அவரும் அப்படியே சம்மதித்தார். அவரே இப்படத்தை இயக்க மிகச் சிறந்த நபர். ஏனென்றால் அவர் இப்படத்தின் ஒரு பகுதியை இயக்கி முடித்து விட்டார். மீதியை யார் இயக்கினாலும் அது சரியாக இருக்காது.

மேலும் லாரன்ஸ் மாஸ்டர் ஆச்சர்யம் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர். இப்படத்தை தமிழில் அவரே இயக்கி நடித்தும் இருக்கிறார். மக்களும் படத்தைக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆக இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அவரது விலை மதிப்பில்லா சொத்து என்று தான் சொல்ல வேண்டும்.
இப்போது நாங்கள் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றார் கீயரா

மேலும் கீயரா இப்படத்தைத் தொடர்ந்து அக்ஷய் குமாருடன் good news என்னும் படத்திலும் நடிக்க இருக்கிறார். தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கரீனா கபூரும், டில்ஜிட் தோசனும் இடம்பெறுகிறார்கள்.

இப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று கீயரா தெரிவித்தார்.