கொலையுதிர் காலம் திரில்லர் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் – விக்னேஷ் சிவன்

முழுமையான ஈடுபாடும், இனிய உறவும் தான் ஒரு படத்தை வளர்த்தெடுக்கிறது. கொலையுதிர் காலம் திரைப்படம் விரைவில்  வெளியாக இருப்பதால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டிரெய்லர் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்துள்ளது, குறிப்பாக நயன்தாராவின் புதுமையான கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது. 

இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை பற்றி கூறும்போது, “கொலையுதிர் காலம் படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற நான் மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் படத்தை பார்த்தேன், இது ஒரு முழுமையான படம், இந்த திரில்லர் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சீசனில் அனைவரும் விரும்பும் ஜானராக திரில்லர் இருப்பதால், இந்த படம் அதற்கு ஏற்ற நல்ல வரவேற்பை பெறும். நயன்தாரா மற்றும் மற்ற நடிகர்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குனர் சக்ரி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு தொழில்நுட்ப ரீதியிலும், கதையிலும் சிறப்பான படமாக இதை கொண்டு வந்திருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தயாரிப்பாளர் மதியழகன் இந்த திரைப்படத்தின் மீது வைத்திருக்கும் ஈடுபாடு மற்றும் அக்கறையை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தை மிகச்சிறப்பாக வெளியிட அவர் எடுக்கும் முயற்சி நல்ல கதையம்சம் உள்ள படங்களின் மீது அவர் வைத்திருக்கும் ஈடுபாட்டை காட்டுகிறது. 

இதற்கு முன்பு சில கசப்பான தருணங்கள் எங்களுக்குள் நிகழ்ந்தன. அவை துரதிருஷ்டவசமானது மற்றும் தேவையற்றது. இறுதியில் ஒரு நல்ல உரையாடல் அவைகளை நேர்மறையான நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. நாங்கள் அனைவரும் திரைப்படத் தொழிலில் இருக்கிறோம், நன்மதிப்பும், நேர்மறையான சிந்தனைகளும் எங்களை சுற்றி பரவுவது தான் நல்லது. கொலையுதிர் காலம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை பெற நான் மனதார வாழ்த்துகிறேன். முக்கியமான மதியழகன் அவர்களின் தன்னம்பிக்கைக்காக. எப்போதுமே நல்ல கதையம்சம் உள்ள படங்களை ஆதரிக்கும் ரசிகர்கள், இந்த படத்தையும் ஆதரிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள “கொலையுதிர் காலம்” விரைவில் உலகமெங்கும் வெளியாகிறது. எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் மதியழகன், ஸ்டார் போலாரிஸ் LLP உடன் இணைந்து இந்த திரைப்படத்தை வெளியிடுகிறார்.