கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை 10 ஆம் பதிப்பு அறிமுக விழா

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் 10ஆம் பதிப்பு சென்னையில் நேற்று  வெளியிடப்பட்டது. அமெட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் நூலை வெளியிட மூத்தபாடகி பி.சுசீலா முதற்படி பெற்றுக் கொண்டார். ஏற்புரையில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

“வாசிக்கும் பழக்கம் அற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் வருந்தவேண்டாம். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் வழக்கம் தொடங்கியிருக்கிறது. இல்லையென்றால் ‘தமிழாற்றுப்படை’ 90 நாட்களில் பத்துப் பதிப்பு கண்டிருக்க முடியாது.தமிழாற்றுப்படையை உயர்த்திப் பிடித்த ஊடகங்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி சொல்வதில் நான் நாகரிகமடைகிறேன்.

தமிழ் பெருமையுறுவதுபோல் ஒரு தோற்றம் தெரிகிறது. ஆனால் அது மாயமான் தோற்றம்போல் மறைந்துவிடக்கூடாது என்ற கவலையும் வருகிறது. உலக மொழிகளில் 18 ஆம் இடத்திலும் இந்திய மொழிகளில் 5 ஆம் இடத்திலும் தமிழ் திகழ்கிறது. இது வெறும் எண்ணிக்கைக் கணக்குதான். எல்லாத் தருணங்களிலும் எண்ணிக்கையே தர்மமாகிவிடாது.சனி கிரகத்துக்கு 82 நிலவுகள் இருப்பதாக அறிவியல் அறிவிக்கிறது. ஆனால், ஒற்றை நிலவுகொண்ட பூமியில்தான் உயிரினங்கள் வாழ வசதியிருக்கிறது. எண்ணிக்கையிலேயே எல்லாவற்றையும் தீர்மானித்துவிட முடியாது. 

தொன்மை-இலக்கியம்-வரலாறு-பண்பாடு என அனைத்திலும் தமிழ் மூத்த மொழியாக விளங்குவதால்தான் ஐ.நா.சபையில் பிரதமரால் தமிழை மேற்கோள் காட்ட முடிந்தது.‘மதிப்பிற்குரிய விருந்தினரே!‘ என சீன அதிபரைத் தமிழில் விளிக்க முடிந்தது. ஆனால் மேற்கோள் மட்டுமே தமிழை வளர்ந்துவிடுமா என்று அறிவுலகம் அய்யமுறுகிறது. மத்திய அரசு, மொழிஅரசியலைக் கையிலெடுக்கிறதோ என்றும் கருத்துலகம் கவலையோடு கருதுகிறது.‘சொல் என்பது பித்தளை;செயல்தான் தங்கம்’ என்பார்கள். மத்திய அரசு செயல் வடிவில் தமிழை வளர்ப்பதையே தமிழர்கள் விரும்புவார்கள். மொழி வளர்ச்சி என்பது தமிழை மட்டும் வளர்ப்பதில்லை. தமிழர்களையும் வளர்ப்பதுதான்.

தமிழ்மீதும் தமிழர்கள்மீதும் மெய்யன்பு காட்டுவதானால் கீழ்க்கண்டவற்றை ஆசையோடு அமல்படுத்த வேண்டும்.

  1. தமிழும் ஆட்சிமொழியாய் அறிவிக்கப்படவேண்டும்.
  2. நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்.
  3. அதற்கு முன்னோட்டமாய் மாநிலங்களில் விளங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலும்  இயங்க வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்.
  4. தமிழ் பயின்றவர்களுக்கும் தமிழில் பயின்றவர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
  5. வேலை வாய்ப்புத் தேர்வுகளில் தமிழ்மொழி தவிர்க்கப்படக் கூடாது.
  6. செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் செம்மைப்படுத்தப் படவேண்டும்.தமிழாய்ந்த அதிகாரிகளால் அது தலைநிமிர வேண்டும்.
  7. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வழியே ஆங்கிலம், ஸ்பானிஷ், மாண்டரின், ரஷ்யன் போன்ற உலகமொழிகளைத் தமிழ் சென்றடைய வேண்டும். 

வரலாற்று வழியெங்கும் தமிழர்கள் நிறைய இழந்திருக்கிறார்கள். உரோமம் உள்ள விலங்குகள் நெருப்புக்கு அஞ்சுவது மாதிரி பாதிக்கப்பட்ட தமிழர்கள் இன்னொரு மொழியின் திணிப்புக்கு அஞ்சுகிறார்கள். சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் காட்டப்படும் முன்னுரிமையை மூத்த மொழியான தமிழுக்கும் மத்திய அரசு வழங்கவேண்டும். பிரதமர் தமிழ் உச்சரித்ததில் எங்கள் செவி குளிர்ந்தது. ஆனால், இதயத்தைக் குளிரவைக்க இன்னும் ஏராளம் இருக்கிறது.”

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

இவ்விழாவில் தொழிலதிபர் வெங்கடேஷ், வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். நிதிஆலோசகர் கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார். தொழிலதிபர் கணபதிமந்திரம் நன்றியுரையாற்றினார். விழாவில் 200க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.