கமல்ஹாசன் மீது இந்து மக்கள் கட்சி சார்பில் புகார்

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநில செயலாளர் வீரமாணிக்கம் சிவா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் கருத்து என்ற போர்வையில் ஊடகங்களின் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தமிழக மக்கள் பற்றியும், குறிப்பாக இந்துகள் பற்றியும் அவதூறான தகவல்களை வெளியிட்டு வருகிறார். 

இந்துகள் தெய்வ நூலாக போற்றி வணங்கி வரும் மகாபாரதம் பற்றி இழிவான தகவல்களை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். அவரது கருத்து தேசிய ஒருமைப்பாட்டுக்கும், இந்திய இறையாண்மைக்கும் எதிரானதாக உள்ளது. அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது.