அரசு மதுக்கடையில் பெண் விற்பனையாளர்

கேரளாவில் முதன்முதலாக பெண் ஒருவர் அரசு மதுக்கடையில் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  கேரளாவில் அரசு மதுபான விற்பனை கழகம் மூலம் 350க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆண்கள் மட்டுமே விற்பனையாளர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் எழுத்துத்தேர்வு மூலமே பணியமர்த்தப்படுவர், இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டில் நடந்த எழுத்துத்தேர்வில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி என்ற பெண் உட்பட 8 பேர் தேர்வு பெற்றனர்.

ஆனால் பெண்கள் என்பதால் அவர்கள் விற்பனையாளர்களாக நியமிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஷைனி உட்பட 8 பேரும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் அரசு பணியில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கக்கூடாது எனவும், தேர்வில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி அப்பகுதியில் உள்ள அரசு மதுபான விற்பனை கூடத்தில் விற்பனையாளராக நேற்று பணியில் சேர்ந்தார். மற்ற பெண்களுக்கும் உடனடியாக பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு மதுபான விற்பனை கழகம் தொடங்கி 33 ஆண்டுகள் ஆகின்றன, இதில் ஷைனி தற்போது முதல் விற்பனையாளராக பணியில் சேர்ந்துள்ளார்.