மிஸ்டர் அண்ட் மிஸ் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017


சென்னையின் முன்னணி மாடலிங் நிறுவனங்களுள் ஒன்றான ‘சென்னை மாடல்ஸ்’, ‘மிஸ்டர் அண்ட் மிஸ் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017’ என்ற போட்டியை நடத்தியது. தகுதியும், திறமையும் கொண்ட மாடல்களைத் தேர்ந்தெடுப்பதோடு, புதியவர்கள் மாடலிங் துறையில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையிலும் இந்தப் போட்டி நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்தப் போட்டி, ரெஜிஸ்ட்ரேஷன், ஆடிஷன், கால் இறுதி, அரையிறுதி ஆகியவற்றைக் கடந்து, கடந்த 26ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற்றது. 64 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், இறுதிப்போட்டிக்கு 20 பேர் (ஆண்கள் 10, பெண்கள் 10) மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள டெக்கான் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், நடிகர்கள் ஷாம், சீமோன், தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ், சுரேஷ் காமாட்சி, பி.ஆர்.ஓ.க்கள் ஜான், வி.கே.சுந்தர், சங்கர், காஸ்டிங் டைரக்டர்ஸ் அருண் – அரவிந்த், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் நவீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ‘மிஸ் சவுத் இந்தியா 2016’ பட்டம் வென்றவரும், இந்தப் போட்டியின் பிராண்ட் அம்பாசிடருமான மீரா மிதுன், விஜய் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு காஸ்டியூம் டிசைன் செய்துதரும் என்.ஜே.சத்யா, மாதவன், அனிருத் உள்ளிட்ட பிரபலங்களின் ஹேர் ஸ்டைலிஸ்ட் தனசேகர் ஆகிய மூவரும் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

‘மிஸ்டர் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017’ ஆக கமருதீன், ஃபர்ஸ்ட் ரன்னர்-அப்பாக தீபன் மோகன், செகண்ட்-ரன்னர் அப்பாக ராஜேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ‘மிஸ் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017’ ஆக ஹர்ஷிதா, ஃபர்ஸ்ட் ரன்னர்-அப்பாக சுஜு வாசன், செகண்ட் ரன்னர்-அப்பாக ஜெய்குமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், மிஸ்டர் – மிஸ் சோஷியல் மீடியா, மிஸ்டர் – மிஸ் பர்ஃபெக்ட் டென், மிஸ்டர் வாக், மிஸ் கேட்வாக், மிஸ்டர் ஹேண்ட்சம், மிஸ் பியூட்டிஃபுல் ஃபேஸ், மிஸ்டர் பிஸிக், மிஸ் பியூட்டிபுல் பாடி ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஷாம், “ராம்ப் வாக்கில் நடக்கும்போது தன்னை ராஜாவாக நினைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், தனக்கு முன்னே ராஜாவே அமர்ந்திருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் கெத்தாக நடக்க வேண்டும்” என்றார். இறுதிப்போட்டிக்கான உடைகளை யுவராஜ் ஹாரி, யக்‌ஷா ஸ்டுடியோஸ் டிசைன் செய்திருந்தனர். மாடல்களோடு இணைந்து ஷோஸ் டாப்பராக விஜே தணிகை மற்றும் மீரா மிதுன் இருவரும் நடந்தது, நிகழ்ச்சிக்கே மணிமகுடமாக இருந்தது.

“மாடலிங் என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கு தவறான கண்ணோட்டம் இருக்கிறது. அதை மாற்றுவதோடு, மாடலிங் துறையில் நுழைய விரும்புவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை எங்கள் நிறுவனம் மேற்கொள்ளும். தமிழ்நாட்டில் உள்ள மாடல்களை, இந்திய அளவில் கொண்டு செல்வதற்கான பணிகளை நாங்கள் செய்ய இருக்கிறோம்” என்கிறார் ‘சென்னை மாடல்ஸ்’ நிறுவனத்தின் சிஇஓ சி. காவேரி மாணிக்கம்.