கஜா புயலால் பாதித்த ‘கார்க்வயல்’ கிராமத்தை தத்து எடுத்த விஷால்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து நிவாரண பொருட்கள், நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடிகர், நடிகைகளும் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, ஜிவி பிரகாஷ் போன்ற ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நிதி உதவி அளித்துள்ளனர்.

இதற்கிடையே நடிகர் சங்க தலைவர் விஷால் புயலால் பாதித்த ஒரு கிராமத்தை தத்தெடுத்து இருக்கிறார். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கடும் பேரழிவை சந்தித்திருக்கிறது. அதில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள கார்க்வயல் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார் விஷால்.

இது தற்காலிகமாக இல்லாமல், முழுமையாக மறு சீரமைப்பு செய்து இந்தியாவிலேயே ‘சிறந்த கிராமமாக‘ மாற்றுவேன் என்றும் அந்த கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த கார்காவயல் கிராம மக்கள், எங்கள் கிராமத்தை தத்தெடுத்த விஷாலுக்கு எப்பொழுதும் நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று கூறியுள்ளனர்.