அதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா

வெகு சில நடிகர்களே எந்த மாதிரியான கதாப்பாத்திரம் செய்தாலும் ரசிகர்களை திரையோடு கட்டிப்போடும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் க்யூட் அப்பாவி இளைஞனாக இருக்கட்டும், அல்லது சாந்தமான சைக்கோ கொலையாளியாக இருக்கட்டும் தான் ஏற்கும் பாத்திரங்களில், அப்படியே ஒட்டிக்கொண்டு, கதாப்பத்திரமாக மாறிவிடும் தன்மை கொண்டவர் நடிகர் நந்தா. சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பான “ “வானம் கொட்டட்டும்“ படத்தில் இரட்டை வேடத்தில் அனைவரையும் கவரும் நடிப்பை தந்திருந்தார். தற்போது அதர்வா முரளி நடிப்பில் உருவாகும் போலீஸ் திரில்லர் படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து இயக்குநர் ரவீந்தர மாதவ் கூறியதாவது…

இப்படம் துவங்கப்பட்டபோதே படத்தில் இருக்கும் கனாமான வில்லன் கதாப்பாத்திரம் குறித்து கூறியிருந்தேன். திரையில் அந்த கதாப்பாத்திரத்தினை உயிர்பிக்க திறமை வாய்ந்த ஒருவர் தேவைப்பட்டார். மிகச்சரியான ஒருவரை தேடுவதென்பது மிக நீண்ட பயணமாக இருந்தது. இறுதியாக அசாத்திய திறமை கொண்ட நடிகர் நந்தா எங்களுடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார். அனைவரையும் கவர்ந்திழுக்கும் முக அமைப்பு கொண்ட அவர் நடிப்பிலும் சிறந்து விளங்குபவராக இருக்கிறார். எந்த ஒரு பாத்திரம் ஆனாலும் எளிதில் அந்த பாத்திரமாக மாறிவிடும் திறமை அவருக்கு இருக்கிறது. மேலும் இப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரம் வெறும் உடல் வலிமை மட்டும் கொண்டு செயல்படுபவன் அல்ல, மகா புத்திசாலித்தனமாக செயல்படுபவன். நடிகர் நந்தா ஏற்கனவே இந்த இரு தளங்களிலும் தன்னை நிரூபித்தவர். மகச்சிறந்த நடிகர்கள் குழுமம் படத்தில் இணைந்திருக்கிறது. அவர்கள் அனைவருடனும் இணைந்து பணிபுரிய வெகு ஆவலுடன் காத்திருக்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்புகள் முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என்றார்.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். புகழ்மிகு இயக்குநர்களான பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர் இவர். இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார், நந்தா வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சில முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கலை செய்ய, சரவணன் சண்டை பயிற்சி இயக்கம் செய்கிறார். கலை இயக்குநராக ஐயப்பன் பணியாற்றுகிறார்.