தமிழகத்தில் 2 புயல்கள்

இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவ மழை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தை குறிப்பாக சென்னையை 2 புயல்கள் தாக்கும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவ மழை கடந்த ஆண்டு (2016) போதிய அளவு பெய்யவில்லை. இயல்பை விட 62 சதவீதம் குறைவாகவே பெய்தது. நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவியது. தமிழகம், மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 2-வது இடத்தில் இருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. தென் மேற்கு பருவ மழை இயல்பை விட அதிகமாக பெய்ததால் நிலைமை சமாளிக்கப்பட்டது.

இந்த வார இறுதியில் வட கிழக்கு பருவ மழை தொடங்குகிறது. வருகிற 7-ந்தேதியும், 12-ந்தேதியும் வங்கக் கடலில் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. முதலாவது புயல் 11-ந் தேதியிலும், 2-வது புயல் 15-ந்தேதியில் இருந்து 20-ந்தேதியிலும் கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. முதலாவது புயலின் போது தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும். இரு புயல்களும் கடலூருக்கும், ஆந்திராவின் நெல்லூருக்கும் இடையே சென்னையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் கடக்கும். அப்போது பலத்த காற்றுடன் மழை கொட்டும் என்பதால் அதிக அளவு சேதம் இருக்கும்.
இந்த புயல்களால் வட கிழக்கு பருவ மழை காலத்தில் 111 சதவீத அளவுக்கு இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும். மேலும் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கோடியக்கரைக்கும், கடலூருக்கும் இடையே பலவீனம் அடைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.