பொறியியல் மாணவர் சேர்க்கை- ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள் வேண்டும்- ராமதாஸ்

sutdent applicationform  பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள் தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நடைமுறை நேற்று தொடங்கியது. ஆனால், அதற்கான தொழில்நுட்ப வசதிகள் சரியாக செய்யப்படாததால் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பிய மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தான் ஒற்றைச் சாளர முறையில் மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டு முதல் அனைத்து மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களும் ஆன்லைனில் பெறப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை ஆன்லைனில் நிரப்பி, அதை பதிவிறக்கம் செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவித்தது.

மாணவர் சேர்க்கையை தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதில் இது சிறந்த முன்னேற்றம் தான். ஆனால், இதற்கான தொழில்நுட்ப கட்டமைப்பு வலிமையாக வடிவமைக்கப்படாதது தான் சோகம். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்பம் சார்ந்த புதிய முறையை அறிமுகப்படுத்தும் போது அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளை செய்திருக்க வேண்டும். மாணவர் சேர்க்கை இணையதளத்தில் ஒரே நேரத்தில் எத்தனை பேர் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தாலும் இணையதளம் முடங்காத வகையில் அதன் சர்வர் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதை செய்யாதது அண்ணா பல்கலைக்கழகத்தின் தவறு தான். இந்த தவறை சரி செய்து மாணவர் சேர்க்கை இணையதளம் முடங்காமல் இருப்பதை அண்ணா பல்கலை. உறுதி செய்ய வேண்டும்.

எனவே, பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் எளிதாக விண்ணப்பிப்பதற்காக தமிழகம் முழுவதும் தேவையான இடங்களில் உதவி மையங்களை அமைக்க அண்ணா பல்கலைக்கழகம் முன்வர வேண்டும். இந்த மையங்களில் வழங்கப்படும் இலவசமாக சேவை வழங்கப்பட வேண்டும்; இதற்காக மாணவர்களிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என்றும் அந்த மையங்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.