கால்பந்து போட்டியை ரசித்த பெண்கள்

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது அவை ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கால்பந்து ஸ்டேடியத்துக்கு குடும்பத்துடன் சென்று கால்பந்தை பார்க்கும் உரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று நடந்த கால்பந்து போட்டியை பெண்களும் நேரடியாக பார்த்து ரசித்தனர். ஜெட்டா நகரில் நடந்த சவுதி ப்ரொஃபஷனல் லீக் போட்டியை பெண்களும் பார்த்தனர். மிகவும் உற்சாகம் அடைந்த பெண்கள், செல்ஃபி போட்டோஸ் எடுத்துக்கொண்டதுடன் தங்களுக்கு பிடித்த அணிக்கு அதரவாக குரல் எழுப்பினர்.பெண்கள் பார்வையாளர்களாக வருவதையொட்டி, அவர்கள் குடும்பமாக உட்கார்ந்து பார்க்கும் வகையில் ஸ்டேடியத்தில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டது. பெண்களுக்கு என்று பிரத்தியேக ஓய்வு அறை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இன்று சவுதி தலைநகர் ரியாத்தில் நடக்கும் மற்றொரு போட்டியிலும் பெண் பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கும் சிறப்பு வசதிகளை சவுதி அரசு அதிகாரிகள் செய்துள்ளனர்